புனித பனிமயமாதா திருத்தலம் பெரம்பலூ​ர்

கும்பகோணம் மறை மாவட்டம்

சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு, பெரம்பலூர் - 62​1212

கும்பகோணம் மறைமாவட்டம்
பெரம்பலூர் பங்கின் ​மரியா​யின் சேனை

பெரம்பலூர் பங்கில் மரியா​யின் சேனை வரலாறு

பெரம்பலூர் பங்கில் அருட்திரு எம். எஸ். மரியதாஸ் அடிகளார் இருந்த காலத்தில் 20.03.1966 இல் மரியா​யின் சேனை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மற்ற பல பங்குகளுக்கும் பரவலாக்கப்பட்டது. 

மரியா​யின் சேனை ​உறுப்பினர்கள்

01. 01-​ப​னிமய மாதா அன்பியம் - ஜான் பிரிட்டோ
02. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - ரெஜினா
03. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - எலிசபெத் ராணி
04. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - நோயலா மேரி 
05. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - ஜோஸ்பின் 
06. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - ஜெசிந்தா 
07. 03-​ஆரோக்கிய மாதா அன்பியம் - எமிலி மேரி
08. 04-​பாத்திமா மாதா அன்பியம் - ஜான் பார்த்தசாரதி
09. 05-​மங்கள மாதா அன்பியம் - திரவியம் 
10. 13-செபமாலை மாதா அன்பியம் - லில்லி 
11. 17-​அலங்கார அன்னை அன்பியம் - ஞானசேகர்
12. 17-​அலங்கார அன்னை அன்பியம் - சகாயமேரி
13. பீட்டர் ராஜ்
14. மோனிகா 

சேனையின் ஜெபங்கள்

     கீழ்க்கண்டவை மரியாதையின் சேனையின் ஜெபங்கள். சேனைக் கூட்டங்களில் சொல்ல வேண்டிய முறைப்படி அவை இங்கே பிரித்துத் தரப்பட்டுள்ளன. தனிமையாகச் செல்லும் போதும் இந்த முறையை முழந்தாளிட்டு அனுசரிக்க வேண்டிய தேவையில்லை. சேனையின் உதவி உறுப்பினர் இந்தச் ஜெபங்களை எல்லாம் நாள்தோறும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

     இச்செபம் பற்பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சொல்லப்பட்டால் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் முடிவிலும் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது. இது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சொல்லப்படவில்லை எனில் இந்த ஜெபத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டும் சிலுவை அடையாளம் வரைய வேண்டும்.

1. ​கூட்டத்தின் தொடக்கத்தில் சொல்ல வேண்டிய செபங்கள்: (அனைவரும் பக்தியுடன் செபிக்கவும்)

முதல்வர்:

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்.

அனை:

தூய ஆவியே எழுந்தருளி வாரும்; உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளின் அன்பின் நெருப்பை மூட்டியருளும்;

முதல்வர்:

ஆண்டவரே உமது ஆவியை அனுப்பியருளும். அவரால் அவை படைக்கப்படும்.

அனை:

அதனால் உலகின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

செபிப்போமாக:

முதல்வர்:

தந்தையாம் இறைவா! உமது தூய ஆவியின் கொடைகளை உலகின் மேல் பொழிந்தருளும். நற்செய்தியை போதிக்க துவங்கிய காலத்தில் உமது திருச்சபையின் மேல் உமது ஆவியை பொழிந்தீரே, இக்காலத்தில் அதே ஆவியானவர், விசுவசிக்கும் அனைத்து உள்ளங்களின் மூலமாக, செயல்பட வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மன்றாடுகிறோம்.

அனை:

ஆமென்.

முதல்வர்:

ஆண்டவரே நீர் என் இதழ்களைத் திறந்தருளும்.

அனை:

என் நா நான் உம்மைப் புகழக் கடவது.

முதல்வர்:

இறைவா நீர் எனக்கு உதவியாக வரும்.

அனை:

ஆண்டவரே நீர் எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

முதல்வர்:

தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

அனை:

தொடக்கத்தில் இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. 
ஆமென்.

(இதன் பின் ஜெபமாலையின் ஐந்து பத்து ஜெபம் சொல்ல வேண்டும்)

செபிப்போமாக:

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய, நம் ஆண்டவர், இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய, கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கும், இறந்தோருக்கும், தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியானவரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்க திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். 
ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம், விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை, இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை, மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.

அருள் நிறைந்த மரியே...

அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும், ஆசீர் பெற்றவரே.

புனித மரியாயே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும், வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

தந்தைக்கும் மகனுக்கும்...

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்தில் இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே...

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

குறிப்பு: ஒவ்வொரு 10 மணிக்கு பிறகும் சொல்ல வேண்டியது.

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்: (திங்கள், சனி)

  1. கப்ரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கல வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
  2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.
  3. இயேசு பிறந்ததை தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
  4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுலத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
  5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு ஜெபிப்போமாக.

துயர் மறை உண்மைகள்: (செவ்வாய், வெள்ளி)

  1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
  2. இயேசு கற்றூனில் கட்டுண்டு அடிபட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
  3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
  4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!

மகிமை நிறை மறை உண்மைகள்: (புதன், ஞாயிறு) 

  1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
  2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
  3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
  4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்கு பெற செபிப்போமாக!
  5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செவிப்போமாக!

ஒளி நிறை மறை உண்மைகள்: (வியாழக்கிழமை)

  1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதைத் தியானிப்போமாக!
  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானிப்போமாக!
  3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதைத் தியானிப்போமாக!
  4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதைத் தியானிப்போமாக!
  5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக!

ஜெபமாலை நிறைவில்:

அதிதூதரான புனித மிக்கேலே, தேவ தூதரான புனித கப்ரியேலே, ரபேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக் கொண்ட இந்த 53 மணி ஜெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி, புனித தேவமாதாவின் திருப்பாதத்தில், பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
ஆமென்.

கிருபை தயாபத்து மந்திரம்:

  • கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் ராகினியே வாழ்க! எங்கள் ஜூவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம்.
  • இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
  • ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திரு கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
  • இதனிடையே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு நாதருடைய பிரத்யட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும்.
  • கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே!

இயேசு கிறிஸ்து நாதருடைய, திரு வாக்குத்தத்தங்களுக்கு, நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக.

சர்வேஸ்வரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.

முதல்வர்:

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி ஆகுவதற்காக.

அனை:

இறைவனுடைய தூய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக:

முதல்வர்:

தந்தையாம் இறைவா! உமது தூய ஆவியின் கொடைகளை உலகின் மேல் பொழிந்தருளும். நற்செய்தியை போதிக்க துவங்கிய காலத்தில் உமது திருச்சபையின் மேல் உமது ஆவியை பொழிந்தீரே, இக்காலத்தில் அதே ஆவியானவர், விசுவசிக்கும் அனைத்து உள்ளங்களின் மூலமாக, செயல்பட வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மன்றாடுகிறோம்.

அனை:

ஆமென்.

முதல்வர்:

இயேசுவின் மிகவும் தூய இருதயமே,

அனை:

எங்கள் மேல் இரக்கமாயிரம்.

முதல்வர்:

மரியாயின் மாசற்ற இருதயமே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல்வர்:

தூய யோசேப்பே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல்வர்:

நற்செய்தியாளரான தூய யோவானே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல்வர்:

தூய லூயி மரி தெமோன் போர்தே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்.

2. ​சேனையின் சங்கிலி ஜெபம்

(இது கூட்ட நிகழ்ச்சிகளின் நடுவில் எழுந்து நின்று சொல்ல வேண்டிய செபம். ஒவ்வொரு சேனையாரும் நாள்தோறும் இதைச் சொல்ல வேண்டும்)

எல்லோரும் (தொடக்கவுரை):

"வைகறை போல் தோற்றம்; திங்களைப்போல் அழகு; ஞாயிறு போல் ஒளி; போரணி போல் வியப்பார்வம்; யாரிவள்!" (இ.பா.6:10)

முதல்வர்:

ஆண்டவரை எனது உள்ளம் + (தந்தை, மகன்... அடையாளம் இடவும்) போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.

அனை:

என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

முதல்வர்:

ஏனெனில் அவர்தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னை பேறுபெற்றவர் என்பர்.

அனை:

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்
தூயவர் என்பதே அவரது பெயர்.

முதல்வர்:

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இறக்கம் காட்டி வருகிறார். 

அனை:

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

முதல்வர்:

வலியோரை அரியணையினின்று
தூக்கி எறிந்துள்ளார்.
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். 

அனை:

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

முதல்வர்:

மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர் தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார். 

அனை:

தம் ஊழியராகிய இஸ்ரேயலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் 

முதல்வர்:

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும்
மகிமை உண்டாவதாக

அனை:

தொடக்கத்தில் இருந்தது போல் இப்பொழுதும்
எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

எல்லோரும் "வைகறை போல் தோற்றம்; திங்களைப் போல் அழகு; ஞாயிறு போல் ஒளி; போரணி போல் வியப்பார்வம்; யாரிவள்!"

முதல்வர்:

செம்மப் பாவமின்றி உற்பவித்த மரியே, 

அனை:

உம்மை நாடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக:

முதல்வர்:

எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, தந்தையிடம் எங்களுக்காக பரிந்து பேசுபவரே, உமது தாயாகிய மிகவும் பரிசுத்த கன்னிகையை எங்களுக்கும் தாயாகவும், உம்மிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராகவும், நியமிக்கத் திருவுளமானீரே, உம்முடைய வரங்களைத் தேடி உம்மை நாடி வருபவர்கள் அனைவரும் அவள் மூலமாய் அவற்றைப் பெற்று மகிழுமாறு அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அனை:

ஆமென்.

3. ​சேனைக் கூட்ட முடிவு ஜெபம்

(இது கூட்டத்தின் முடிவில் முழந்தாளிட்டுச் சொல்ல வேண்டிய ஜெபம். எளிதில் படிக்கக் கூடிய வகையில், இச்சபம் அமைக்கப் பெற்றிருக்கின்றது)

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே... ஆமென்.

கடவுளின் தூய அன்னையே, இதோ உம்மிடம் அடைக்கலம் தேடி வருகின்றோம். எங்கள் தேவைகளில் நாங்கள் உமக்கு ஒப்புக் கொடுக்கும் மன்றாட்டுக்களைப் புறக்கணியாதேயும், மாட்சிமை பொருந்திய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எப்பொழுதும் எங்களைப் பாதுகாத்தருளும்.

முதல்வர்:

(பிரசீடியத்தின் பெயரைக் கன்னித்தாயின் பெயரோடு இணைத்துச் சொல்லவும்)

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
(பிரசீடியக் கூட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் உறுப்பினர்கள் பின்வருமாறு சொல்லவும்) 

முதல்வர்:

எல்லா அருள் வரங்களின் மத்தியஸ்தியாகிய அமலோற்பவ மரியே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

முதல்வர்:

தூய மிக்கேலே, தூய கபிரியேலே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். 

முதல்வர்:

வானுலக வல்லமைகள் அனைத்துமே, மரியாவின் வான தூதர்களின் சேனையே.

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். 

முதல்வர்:

தூய திருமுழுக்கு யோவானே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். 

முதல்வர்:

பேதுரு, பவுல் என்னும் புனிதர்களே,

அனை:

எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

(கீழ்க்கண்ட ஜெபத்தை துவக்கமுதல் ஆமென் வரை எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும். அதன் பிறகு உள்ள பகுதியை குரு மட்டும் சொல்லுவார்).

செபிப்போமாக:

எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே,
மரியன்னையின் கொடியின் கீழ் போர் புரியும் எங்களுக்கு
உன் மீது குறைவற்ற விசுவாசத்தையும்
உமது அன்னையின் மீது நிறை நம்பிக்கையும் தந்து
உலகத்தை வெல்லுமாறு வல்லமை அளித்தருளும்.
எங்கள் செயல்கள் அனைத்தையும்
உம்மீதுள்ள அன்பிற்காக மட்டும் செய்யவும்
எங்கள் அயலாரில் உம்மையேக் கண்டு உமக்கே பணி புரியவும்
இறை அன்பால் ஊக்கம் பெற்ற உயிருள்ள விசுவாசத்தைத் தந்தருளும்.
வாழ்க்கையில் நேரிடும் சிலுவைகளிலும், வருத்தங்களிலும், ஏமாற்றங்களிலும்,
நாங்கள் மனந்தளராமல் அமைதியாக இருக்க
கற்பாறை போன்ற உறுதியான, அசைக்க முடியாத விசுவாசத்தைத் தந்தருளும்.
கடவுளுக்காகவும் ஆன்மாக்களின் மீட்புக்காகவும்,
பெருங்காரியங்களைத் தயக்கமின்றித் தொடங்கவும், தொடர்ந்து செய்யவும்,
துணி உள்ள விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருளும்.
நாங்கள் ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்லவும்
இறை அன்பின் நெருப்பை எங்கும் எரியச் செய்யவும்
இருளிலும் சாவின் நிழலிலும் இருப்பவர்களுக்கு ஞான ஒளி தரவும்
ஆர்வமற்றவர்களுக்கு ஊக்கம் ஊட்டவும்
பாவத்தால் ஆன்ம உயிர் இழந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும்,
சமாதானத்தின் வழியில் நாங்கள் அடிசறுக்காமல் நடந்து செல்லவும்
எங்களுக்கு நெருப்புத் தூண்போல் துணைபுரியும் விசுவாசத்தைத் தந்தருளும்,
இவ்வாறு வாழ்க்கை என்னும் போராட்டம் முடிவடைந்தப் பிறகு
எங்கள் சேனை முழுவதும் அதன் உறுப்பினர் ஒருவரையும் இழக்காமல்
உமது அன்பும் மாட்சியும் விளங்கும் நித்திய பேரின்ப நாட்டில்
உமது முன்னிலையில் மீண்டும் அணிவகுத்து நிற்க
அருள் புரிந்தருளும் ஆண்டவரே. ஆமென்.

முதல்வர்:

இறந்த நம் சேனையர் ஆன்மாக்களும்
இறந்த விசுவாசிகள் அனைவரின் ஆன்மாக்களும்,
கடவுள் இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறுவனவாக.
ஆமென். 

(பிறகு குரு தம் ஆசீர் வழங்குகிறார். குரு இல்லையெனில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென். சொல்லவும்)

"மரியாவின் விசுவாசம் எல்லா மனிதரின் விசுவாசத்தை விட, எல்லா வானதூதர்களின் விசுவாசத்தை விட மேம்பட்டதாயிருந்தது. தன் மகன் பெத்தலகேமில் ஒரு மாட்டுக் கொட்டிலில் படுத்திருப்பதை அவள் கண்டால். ஆனாலும் அவரே உலகத்தைப் படைத்தவரென்று விசுவாசித்தாள். ஏரோது அரசினிடமிருந்து அவர் தப்பி ஓடுவதை அவள் கண்டாள். ஆனாலும் அவர் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்பதை ஐயமற விசுவாசித்தாள். அவர் ஒரு குழந்தையாகப் பிறந்ததைக் கண்டாள். ஆனாலும் அவர் நித்தியர் என்பதை விசுவாசித்தாள். அவர் ஏழையாகவும் வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதவராயும் வருந்துவதைக் கண்டாள். ஆனாலும் அவர் அண்ட கோளங்களையும் ஆள்பவர் என்பதை விசுவாசித்தாள். அவர் வைக்கோல் மீது படுத்திருப்பதையும் கண்டாள். ஆனாலும் அவர் எல்லாம் வல்லவர் என்று அவளுடைய விசுவாசம் அவளுக்கு உணர்த்திற்று. அவர் ஒரு வார்த்தை முதலாய் சொல்லாமல் மௌனமாயிருப்பதை கண்டாள். ஆனாலும் அவரே நித்திய ஞானம் என்பதை விசுவாசித்தாள். அவர் அழுவதை அவள் கேட்டாள். எனினும் அவரே விண்ணகத்தின் பேரின்பம் என்பதை விசுவசித்தாள். இறுதியில் அவர் நெஞ்சை வாதனைகளுக்கு ஆளாகி சிலுவையில் அறையுண்டு இறப்பதை அவள் கண்டாள். பிறர் விசுவாசத்தில் தடுமாறித் தவறினாலும், மரியா உறுதியாயிருந்து, அவர் கடவுள் என்பதை விசுவாசித்தாள். "

(தூய அல்போன்ஸ் லிகோரியார்) (இது சேனைச் செபங்களைச் சேர்ந்த பகுதியல்ல).

முகவரி

சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு,
பெரம்பலூர் - 621212

கைப்பேசி

+91 72000 97653
+91 4328-277245

மின்னஞ்சல்

panimayamadha2019@gmail.com

காணிக்கை

Gpay : + 91 72000 97653

எங்களைத் தொடர்பு கொள்ள

ஜெப உதவிக்கு, உங்களின் தனிப்பட்ட தேவைகளை இங்கே பூர்த்தி செய்து அனுப்பவும் உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Thank you! Your message has been sent.
Unable to send your message. Please fix errors then try again.

விதிமுறைகள் & நிபந்தனைகள்

தனியுரிமைக் கொள்கை